Home
    Profile
    Authors Listing
    Links
    Contact  

Categories

Articles(450)
Banking scandals(2)
Blogs(13)
Eating Out(2)
Journos' Corner(4)
Movie Reviews(3)
Music, Cinema, Dance, Culture(2)
Poems in English(48)
Poems in Hindi & Urdu(7)
Poems in Tamil(6)
Short Stories- others(35)
Short Stories-TSV Hari(29)
Tamil Writings(17)
The Poetic Blog(1)
 




Friday, July 06, 2012

மொக்கை   Posted on Jul 6, 2012    Comments (0)

20 வருடங்களுக்கு முன்பு, மெட்ராஸ்...

 

... இப்பிரிவு எத்தனை காலம் தான் நீடிக்குமோ?

 

இந்த அறியாப்பருவத்து மனித மந்தையிலிருந்து

ஒன்றோ இரண்டோ

பிற்காலத்தில் வேறெங்கேனும்

முட்டிக்கொள்ளுமோ?

மோதிக்கொள்ளுமா?

 

அந்த மண்டையிடியின்

முக்கியத்துவத்தை

நிர்ணயிக்கப்போவது

நேற்றைய ஆற்றாமையா?

இன்றைய அறியாமையா?

நாளைய வாழ்வெனும்

அலங்கோல அரங்கின்

குரங்குத் தனமான அகங்காரமா?

 

அந்த இனிய மோதல்

திட்டமிடப்படுமா

சதி செய்தபடி

நிகழ்வுகள் நிறைவேறுமா

அல்லது

விதி எனும் இன்றியமையாமை

வெறுமையை மட்டுமே மிச்சமாகி

ஆசையை எச்சமாகி

கூச்சத்தையே குற்றமாகிவிடுமோ?

 

பலத்த கைதட்டல்.

 

“வழக்கமா இங்க்லீஷுலதானே குழப்புவ, ரமேஷ்? இப்ப, தமிழ்லயும் அசத்தலாக் குழப்பற?” 

 

எனது ஆங்கிலப் பேராசிரியை கமலா இராமகிருஷ்ணன் வியந்து புகழ்ந்தார்.

 

“ஏண்டா அம்பி ... இந்த அளவுக்குத் தமிழ்த் தாய் உன்னோட நாக்குல பத்மாசனம் போட்டு உட்காந்து இருக்காளோன்னோ? உன்னோட Tamil talents ஐ எழுத்தா மாத்தி – நம்ம வாசகர்களுக்கும் – இங்கிலிபீஸ்ல படிக்கறவாளவிட - நல்ல விஷயங்கள - ஜனரஞ்சகமா சொன்னா ரொம்பவும் ஸ்லாக்கியமாவும் இருக்கும், லாபகரமாவும் இருக்கும்!”

 

எனது தமிழ்ப் பேராசிரியர் ஒப்பிலி – காலம் சென்ற பழம்பெரும் ஹாஸ்ய எழுத்தாளர் தேவன் என்கிற மஹாதேவன் ஸ்டைலில் பேசும்போது – எனக்கு திடீரென 1940களுக்குச் சென்று விட்டது போன்ற feeling வந்துவிடும்,

 

“களுக்குவேன்”.

 

“எலெ கஸ்மாலம்! எங்கள எல்லாம் அள உட்டுட்டியேடா பேமானி! ஆனாக்க, நீ ரொம்பவும் ரசிக்கிற மாதிரியான அளுகையக்குடுத்தடா!”

 

அது எனது உயிர்த் தோழன் லச்சுமண் தடானி.

 

ஏதோ ஒரு ஹைதர் காலத்தில் அவனது மூதாதையர்கள் இன்று பாகிஸ்தானாகிவிட்ட பகுதி ஒன்றிலிருந்து நாடு கடந்து அகதிகளாக வந்து மெட்ராஸில் செட்டிலானவர்கள். இன்று சென்னையில் குறைந்த வட்டிக்கு வெள்ளைப் பணம் கடன் கிடைக்க வேண்டுமென்றால் – அக்காலத்து மூல்தானி பேங்கர்ஸ் ஸ்டைலில் பணம் தரும் – தடானி & கோ என்ற ஸ்தாபனத்தை நாடுவது நல்லது.

 

லச்மண் அக்குடும்பத்தில் தோன்றியவன்.

 

வழக்கம்போல, நான் ராதிகாவின் கமென்டுக்காகக் காத்திருந்தேன்.

 

அவளது மான்விழிகளில் தென்பட்ட expression ஓட அர்த்தம் அன்றைக்கு எனக்குப் புரியவில்லை தான்.

 

“கவிதையை மோசம்னு சொல்ல முடியாது ... ஆனா ...”  

 

கிராதகி!

 

இன்றைக்கும் புகழா இகழா எனக் கிண்டி, சுண்டி இழுக்கும் அவளது கொஞ்சும் கேள்விச் சுண்டலுக்காக ஏங்கி, கிண்டல் பொறியில் சிக்கிய சுண்டலியாக நான் விரும்பவில்லை,

 

படிப்பில் புலியான என்னை அவளது அழகும், வார்த்தை ஜாலத்தின் மாய்மாலமும் திக்குமுக்காடச் செய்து – இறுதியில் அசடுவழிய வைத்து விடும்.

 

அப்படியும், எல்லோரையும் போல அவளது அழகுக்கு எனது ஜொள்ளை இடைவிடாது நைவேத்தியம் செய்வது வழக்கம்..

 

இன்று எனது ஜொள் எனக்குள் இரகசியமாக தங்கி ... எனது கவிதை அவளை emotional ஆ move பண்ணித்தா?

 

புரியல்ல.

 

அவளைக் கட்டிப் பிடிச்சு – அவளோட ஆழமான பூனைக் கண்கள்ள மூழ்கி – ராதிகா – உன் மேல ஜொள்ளாபிஷேகம் செய்து நா வறண்டு போச்சுதடீ! இப்பவாவது என் ஜொள்ளுக்கென்ன பதில், சொல், சொல், என் உயிரே! ன்னு கேணத்தனமா எத்தையாவது உளரித் தொலைக்கணும்னு எனக்குள் கோடானுகோடி ஆசை.

 

அதை மட்டும் அன்றைக்குப் பண்ணியிருந்தேன்னா, பன்னிக்குட்டியை எல்லாம் அன்னப்பறவைகள் காதலிச்சதா சரித்திரம் கிடையாதுடா குருமுட்டை முட்டாளேஸ்வரானந்தா! என்றவாறு சிரித்தபடி மறுபடியும் அவள் என்னை அன்றைய send off பார்ட்டியிலும் ஒன்றாம் தரம் idiot ஆக்கியிருப்பாள்! 

 

ரமேஷா கொக்கா?

 

புது டெல்லி 8 வருடங்களுக்கு முன்பு

 

“ரூ.150 கோடிகள் எங்கிற இந்திய மக்களோட கடைத்தேங்காயை தூக்கி எவனோ ஒரு தேறாத பிரஹஸ்பதிக்கு இந்த வங்கியோட சீஃப் மேனேஜரா – சாரி – cheap damager ஆ தாரைவார்த்துத் தொலைத்துவிட்டீரே ஓய்! நீர் எறிஞ்ச தேங்காய் வழிப்பிள்ளையாருக்குப் படைக்கப் படல்ல ... மைல் கல்லோட மதிய உணவாவும் ஆகல்ல! வேடம்பர் கால்களில் உதைபட வேண்டிய கூழாங்கல்த்தனமான கம்பெனி - பெயரே சரியில்லை - கோவிந்தா லக் கே ராஜு & கோ என்கிற பகாசுரனோட உண்டியல்ல - ஏழைகளோட வியர்வைப் பணத்த கோவிந்தாவாக்கிப் போட்டுத் தொலைத்துவிட்டீரே ஸ்வாமி! உம்மோட வங்கியோட பேரு லகலகலகலக....ன்னு .... கொக்கரக்கோவாகி பல்லை இளிக்கப்போகுதே ஒய்! ஆடிட் ரிப்போர்ட்ல உம்மை கிழிச்சுத் தோரணம் கட்டித் தொங்கவிட் ....”  

 

என்னோட ஃப்ரெண்ட் நந்து அந்தக் கிழ போல்ட வார்த்தைகளால பிராண்டி எடுத்துகிட்டு இருந்தான்.

 

நந்து & அய்யர் அஸோஸியேட்ஸ் என்கிற எங்களோட சின்ன ஆடிட்டிங்க் கம்பெனி இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட 19 வங்கிகளில் ஒன்றுடைய கணக்குகளை தணிக்கை செய்யும் ஒப்பந்தத்தைப் புதிதாகப் பெற்றிருந்த காலம் அது.

 

புதிதாக மதம் மாறிய இஸ்லாமியன் 6 முறை தொழுகை செய்வான் என்ற ஒரு பழமொழி உண்டு.

 

இக்காலத்தைப் போல அப்போதும் எங்களைச் சுற்றி ஊழல் சாம்ராஜ்யம் எங்கும் வியாபித்து இருந்தது உண்மை தான். ஆனால், மற்ற பெரிய தேங்காய் மூடி ஆடிட்டிங் கம்பெனிகளைப் போல அல்லாமல், உலகைத் திருத்த வந்த கிருஷ்ணர் – பலராமர் கணக்காக – வங்கி மேனேஜ்மெண்டின் வயற்றில் புளித்த திராவகத்தைக் கரைப்பதையே எங்கள் பழக்கமாகக் கொண்டிருந்தோம்.

 

நாடகங்களில் கிஷ்மு அசடு வழியும்போது விசு உருட்டி விழிப்பது போன்ற ஒரு லுக்கை கிழவன் மீது பாய்ச்சினேன்.

 

நந்து குரைத்துத் தொலைப்பவன்.

 

அவன் கடிப்பானா மாட்டானா என்ற சந்தேகம் பலருக்கு வரும்.

 

இப்படி எல்லாம் கத்தித் தீர்க்கும் நந்து, பிறகு தனிமையில் .... உலகமே லஞ்சத்தின் பஞ்சுமெத்தையில் சயனம் செய்கையில் சில்லறைத் தனமாக நாம் மட்டும் ஏன் பிழைக்கத் தெரியாத பிண்டங்களாக இருக்க வேண்டும்? என்று என்னிடமே வாதாடி, குற்றவாளிக் கம்பெனிகளை ஆடிட் ரிப்போர்ட்டுக்களிலுள்ள பொந்துகள் பொத்தல்கள் வழியாகத் தப்பிக்கவைப்பது பழக்கம்.

 

நான் நந்துவின் பார்ட்னர்.

 

குரைக்காதவன்.

 

Final ஆ தணிக்கை அறிக்கையில் நான் கடித்துக் குதறும்போது, மாட்டிக் கொண்டவர்களது இரத்தம் ஆறாகி, சதை, நாளங்கள் நெளிந்து சதிர்க் கச்சேரி செய்வது வழக்கம்.

 

அச்செயலைப் பெரிசுக்குப் பரிசாக்குவது எனத் தீர்மானித்தேன்.

 

புது டில்லியின் க்ரேட்டர் கைலாஷ் 2 என்ற அந்த costly பகுதியில் நாங்கள் நோண்டும் வங்கியின் regional office அமைந்திருந்தது.

 

அதன் முதல் மாடியில் என்னேரத்திலும் சுதாகர் என்ற பெயருடைய அந்தப் சீஃப் மேனேஜர் க்ரெடிட்ஸ் பதவியிலுள்ள பெரிசு லஞ்சத்தை – கழுதைக்கான கேரட்டாகக் காட்ட முற்பட்டு, ஆண் சூர்ப்பணகை கணக்காக அதன் மூக்கறுபடும் நேரம் நெருங்குகிறது என எண்ணலானேன்.

 

இந்த மனிதர் வாரி வழங்கியிருந்த வாராக் கடன்கள் ஒரு சிறியக் கூட்டுறவு வங்கியை முழங்கால் அளவுத் தண்ணீரில் மூழ்கடிக்கும் அளவுக்கு விஷத்தன்மையுடன் இருந்தது.

 

“நா எல்லாத்தையும் சட்டப்படித் தான் பண்ணியிருக்கேன், தம்பி! எல்லாக் கடனுக்கும் அடிப்படை செக்யூரிட்டியும், 4 மடங்கு கொலாட்டரலும் இருக்கு சார்! மார்கெட்ல உள்ள பண வீக்கம் – மார்கெட் சுருக்கம் ....”

 

நந்துவுக்கு எரிச்சல் வந்தது. 

 

“உம்மோட வெட்கங்கெட்ட சால்ஜாப்புக்களை டைப் பண்ணி வெய்யும்! நாளைக்குக் களெக்ட் பண்ணிக்கறோம்.”

 

நந்துவுக்கு ஏதோ ஒரு சாமியாருடன் அப்பாயின்ட்மென்ட். வேறேதோ ஒரு பேங்கோட ஆடிட்டையும் அந்த ஆசாமியார் வாங்கித் தறதாகச் சொல்லியிருந்தார்.

 

நல்ல ஃபீஸ் கிடைக்கும் என்பது நிச்சயம்.

 

பிழைக்கத் தெரிந்த நந்து, ஒரு கடவுள் பைத்தியம், ஆசாமியார்ப் பித்தன். வழியில் எங்கே கோவிலைப் பார்த்தலும் கன்னத்தில் போட்டுக் கொள்வான். ஏதேனும் சாமியார் தென்பட்டால் – அந்த மனிதருக்கு அரை டஜன் மாமியார்கள் இருந்தாக் கூட – அவாளுக்கு இத்தனை followers இருக்கறப்ப அவா ஏதோ நல்லது செய்யறதாத் தானே அர்த்தம்? How can so many people be fooled? It is impossible, you know!” எனக் கூறி அறுவைக் கச்சேரியை ஆரம்பித்து விடுவான்.

 

நான் ஐ. எம். எஃப் – என்ற பன்னாட்டு பண நிதியத்துக்கு ஒரு சின்னப் ப்ராஜெக்டை உருவாக்குவதாக இருந்தேன்.

 

அதன் வேறொரு பரிமாண வடிவத்தை உலக வங்கிக்கும் அனுப்பும் எண்ணம் இருந்தது.

 

எனது தொடைமீதமரும் கணினியில் இதற்குப் பிள்ளையார்ச் சுழியிட்டு ஆறு மாதங்கள் ஆகியிருந்தன.

 

ஏதேனும் ஒரு ஆசாமியின் காலில் நந்து விழும்போது ஓரத்தில் மரியாதையாகக் கை கட்டி நிற்கும் பழக்கமும் என்னில் கிடையாது.

 

“நீ டெல்லி மலைக் கோவிலுக்குப் போய் ஸுப்ரம்மணியஸ்வாமியை வேரொட பிடுங்கு. அப்புறமா சிவஸ்வாமியாநந்தா தயவுல வியாபாரத்தைப் பெருக்கு. என்னோட college classmate and glass-mate தடானி டெல்லியில எங்கயோ இருக்கான்னு யாரோ சொன்னா. என்னோட ப்ராஜெக்ட மூல்தானி பேங்கிங் ஸிஸ்டத்தோட அவன் புண்ணியத்துல நல்லாக் குழைத்துப் பாயாசமாக்கலாம்னு இருக்கேன். அதுனால நீ உன் வழி ... என் வழி தனி வழி!” என்று கூறி ஜகா வாங்கினேன்.

 

“All work and no play make jack a dull boy!”

 

நந்து பழமொழிந்தான்.

 

விளையாட்டையும் வேண்டுதலையும் வியாபாரமாக்கினால் அதுவே விரசமாகி விரயத்துக்கும் காரணமாகி வீணாகும் என்றேன்.

 

“இன்னொரு நக்கல் புது மொழியா?”

 

கேள்விகேட்ட நந்துவை வழக்கம்போல நான் முதுகில் பழைய, காலம் சென்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் எம்.எல்.ஏ. கணக்கா – ஓங்கித் தடவுவதற்கு முன்பு ஜகா வாங்கினான்.

 

மாலையில் க்ளாரிட்ஜஸ் ஹோட்டலில் எனது அறையில் நானும் தடானியும் கார்து மால்ட் என்ற அதிகம் பிரபலமாகாத ஆனால் பிரமாதமான ஸ்காட்ச் விஸ்கியை சப்புக்கொட்டிச் சீப்பிக் கொண்டிருந்தோம்.

 

தடானி ஏதோ சொந்தக்காரப்பெண்ணை – அவளது தந்தையின் ஸ்விஸ் வங்கியில் பதுக்கியிருந்த பல ஆயிரம் கோடிப் ரூபாய் பதுக்கல் பணத்துக்காகக் கல்யாணம் பண்ணிக்கொண்டு டெல்லியில் settle ஆகி இருந்தான்.

 

ஏற்கனவே அவனுக்குத் தொப்புளுக்கு மேல கஞ்சி.

 

இப்ப கேட்கவே வேண்டியதில்ல.

 

“ரொம்போ நாளா உன் கிட்ட நம்ப ஊர் விஸ்கி ஏன் இவ்ளோ டேஸ்டா இல்லன்னு கேக்லாம்னு இருந்தேன். நீ தான் அல்லாத்துலயும் எக்ஸ்பர்ட் ஆச்சே!”

 

தடானி என்னோட மூளையை நண்டு போலப் பிராண்டினான்.

 

ப்ரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தோட எல்லைக்குள்ள அதோட வடக்குப் பகுதியில இருக்கற நாட்டுக்குப் பேரு ஸ்காட்லாந்து. அங்கே தயார் ஆகற மால்ட் என்கிற ஒரு வித கோதுமைலேந்து தயாறாகற மேட்டருக்கு – ஸ்காட்ச்னு பேரு.

 

“நம்ப ஊர்ல மால்ட் தயாராகாதா?”

 

தாரளமாத் தயார் ஆவும். ஆனா – போதைப் பொருளோட பொருளாதாரம்னு ஒண்ணு இருக்கே! சிம்பிளாச் சொல்லறேன். நம்ப ஊர்ல எல்லா வித விஸ்கி, ப்ராந்தி, ரம், எல்லாமே – Industrial Alcohol அதாவது எரி சாராயம் – coloured and flavoured. எரி சாரயாத்தோட அதிகபட்ச ஃபாக்டரி விலை லிட்டருக்கு ரூ 25. நாம அடிக்கற தண்ணில – அதிக பட்சம் லிக்கர் – 42% தான். மீதி வெறும் சாதாரண பாட்டிலில் நிரப்பப்படும் குடி நீர், கலர், டேஸ்டுக்கான எஸ்ஸன்ஸ் ... ரெண்டு சொட்டு ஸ்காட்சு இத்யாதி. அதாவது நாம ஒரு ஃபுல்னு நெனச்சு வாங்கறமே – அதுல ரூ.10.50க்கு சாராயம். மத்த எல்லாம் சேர்ந்து இன்னொரு ரூ.9.50 ன்னு வெச்சுக்கலாம். பாட்டிலோட சேர்த்தா விலை ரூ. 25. அதைத் தான் நாம சுமார் ரூ.400 குடுத்து ரீட்டெயில்ல டாஸ்மாக்ல வாங்கறோம். இதுல கலால் வரி, புலால் வரின்னு ஏதேதோ ...

 

கதவின் காலிங் பெல் “டிங்கிற்று”.

 

நான்கள் எதையுமே ஆர்டர் செய்திருக்கவில்லையே!

 

க்ளாரிட்ஜஸ்லயும் பலான மேட்டரா?

 

கதவைத் திறந்தேன்.

 

சுதாக்கர் நின்றிருந்தார்.

 

“நான்க உள்ளே வரலாமா?”

 

பன்மையில் அவர் சொல்லவே கழுத்தை நீட்டி, எட்டிப் பார்த்தேன்.

 

அவளது கண்களில் ஒரு வித பளபளப்புடன் அவரது பின்புறம் – ராதிகா..

 

“ஹி ஹி  ராதி ... உங்களோட classmate ... னு”

 

“அதுக்காக ... உம்மோட பொண்ண ஹோட்டலுக்கே கூட்டிகிட்டு வருவீரா? நான் எந்தக் கோலத்துல இருப்பேன்னு உமக்கு ஜோஸ்யம் தெரியுமா? நான் அலங்கோலமா இருந்து ... உம்ம பொண் கிட்டத் தப்பா நடந்து அலங்கோலப்படுத்திட்டா ... அத்த வெச்சு என்ன பேங்குல நீர் வேணும்னா அப்புறமா மடக்கலாம் தான். ஆனா ... அவ வாழ்க்கை அப்பத்துலேந்து என்னவாகும் ஓய்?”

 

“நாங்க சொல்ல வந்ததக் கொஞ்சம்...”

 

ராதிகாவின் வார்த்தையில் கெஞ்சல் தென்பட்டது.

 

ஸாரி ... ராதிக்கா ... தண்ணி அடிச்சிருக்கேன் .... அதுக்கு அப்புறம் .... எந்தப் பொண்ணு கிட்டயும் பேச எனக்குப் பயம். உன்னப் பார்த்தா நல்லா இருக்க! நல்ல நேரத்துலயே உன்னைப் பார்த்தா உளருவேன். இப்போ ... நாளைக்கு மீட் பண்ணுவோம். நௌ ... please capital F and capital O!

 

அழுதவாறே ராதிகா செல்வதைப் பார்த்த எனது மனசுக்குள் மத்தாப்பு.

 

அவ அப்பன் முன்னாடியே அவள இன்னிக்கு ஒரு வழி பண்ணி அழவிட்டேனே!

 

அடுத்த நாள் சுதாக்கர் லீவ் போட்டிருந்தார்.

 

அவரது அலுவலகத்திலிருந்து விலாசத்தைப் பெற்றேன்.

 

கெட்ட வார்த்தையை உபயோகித்ததற்காக ராதிகாவிடம் முறையாக மன்னிப்புக் கேட்க அவளது வீட்டிறுகுச் சென்றேன்.

 

கதவை சுதாக்கர் திறந்தார்.

 

அந்த சுமாரான வசதிகளுடைய ஆர். கே. புரம் ஃப்ளாட்டில் ஒரே கும்பல்.

 

ராதிகாவைப் “பெண் பார்க்க” வந்த மாப்பிள்ளைக்குப் பெண்ணை பிடித்திருந்தது போலும்.

 

காப்பியைப் பருகியவாறே அவனது கண்கள் ராதிகாவைத் துகிலுரித்துக் கொண்டிருந்தன.

 

அவள் என்பக்கம் திரும்பக்கூட இல்லை.

 

எனக்குள் குழப்பம் ... இனம் தெரியாத வருத்தம் ... சொல்ல முடியாத பயம் ... விளக்க முடியாத கூச்சம் .... ஆகியவற்றின் சங்கமம்.

 

தம் அடிக்கும் நொண்டிச் சாக்கைச் சொல்லி பால்கனி பக்கம் சென்றேன்.

 

சுதாக்கர் பின் தொடர்ந்து வந்தார்.

 

“அஷோக் என்னோட மூத்த son... ராதி ... ரெண்டாமவ ... ஒரு மோட்டார் சைக்கிள் விபத்துல ... அவன் கை கால் வராம முடமாகி .... காய்கறித்தனமா அவன் வாழறதப் பார்க்க எனக்கு சகிக்கல்ல. இருக்கற பணத்தை எல்லாம் அவன குணமாக்க வாரி இறைத்தேன். கடைசியில அவனோட சிதையை அப்பிரதட்சணமாச் சுத்தி அந்தப் பணத்தோட கணக்குமேல எள்ளும் தண்ணியும் சேர்த்து விட்டது தான் மிச்சம். அந்த அதிர்ச்சியில ராதியோட அம்மா தவறிட்டா. ராதிக்கு நல்ல சம்பந்தம் வந்தது. அவங்க ஒரு மீடியம் ஸைஸ் எக்ஸ்போர்ட் கம்பெனி நடத்தறாங்க. சீதனம் குடுக்கக் வக்கில்ல ... அதுனால தான் ... இந்தக் கடன ...”

 

எனக்கு அவரது அடுத்த வார்த்தைகளைக் கேட்கப் பிடிக்கவில்லை.

 

கொஞ்சம் அவசர வேலை இருக்கு. போகணும். நேத்து தண்ணியடிச்சு ஏதேதோ பேசிட்டேன். சாரி கேக்கத் தான் வந்தேன். நந்து எப்பவுமே கத்த மட்டும் தான் செய்வான் ... நான் தான் டேஞ்சர் மேன். ரிப்போர்ட்ல பெரிசா எதுவும் வராம நான் பார்த்துக்கறேன். எவ்வளவோ பணத்த யாரெல்லாமோ விரயம் பண்ணறாங்க. நீங்க நல்ல விஷயத்துக்கா...

 

அவரது தோளில் ஆதரவாகத் தட்டி அவசரமாக ஹாலைக் க்ராஸ் பண்ணினப்ப – Congrats Radhika! Wish you a happy married life!  என்றேன்.

 

அவளைப் பார்த்த மாப்பிள்ளையிடம் கை குலுக்கினேன்.

 

ராதிகாவின் அஜ நயனங்களில் நீர் ததும்பியது.

 

அதை ஆனந்தக் கண்ணீர் என நினைத்தேன்.

 

மனதை என்னவோ செய்தது.

 

விரைவாக வெளியேறினேன்.

 

மும்பை ... 3 வாரங்களுக்கு முன்பு

 

எனக்கென்னமோ போகப் பிடிக்கல்லடா நந்து!

 

எங்களது நந்து & அய்யர் அஸோஸியேட்ஸ் இப்போது N & A Financials Ltd என்ற ஒரு பெரிய தணிக்கை ஸ்தாபனமாகி இருந்தது. ஊழல்களில் எங்களுக்குப் பங்கே கிடையாது. ஆனால் சொத்தைகளை பெரிதாகக் காட்டிக் கொடுத்து பெரிய கம்பெனிகளின் சின்னச்சின்ன பங்குதாரர்கள் உட்பட எல்லோரது பகையையும் வயற்றெரிச்சலையும் சம்பாதிக்கும் பழக்கம் எங்களுக்குக் கிடையாது.

 

தாங்க முடியாத ஊழல் இருப்பது தெரிந்தால் – இரகசியமாக ஏதேனும் பத்திரிக்கை நண்பரிடம் கோள் மூட்டி விடுவோம்.

 

மேட்டர்கள் பகிரங்கமாக ஊடகங்களில் அலசப்படும்போது அசிங்கங்களின் நாற்றம் குடலைப் பிடுங்கும்.

 

ஆனால் அது எங்களது அலுவலகத்தை நெருங்காமல் பார்த்துக் கொள்வோம்.

 

நான் சமர்ப்பித்திருந்த ப்ராஜெக்டுகள் ஐ. எம். எஃப்பின் நன் மதிப்பைப் பெற்று அவர்கள் என்னைப் பணியில் சேர்க்க ஆர்வம் காட்டியிருந்தார்கள்.

 

செல்வதா வேண்டாமா என என்னில் குழப்பம்.

 

ஐரோப்பிய வெள்ளையர்கள் தான் அந்த அமைப்பின் தலைவர்களாக இது வரை இருந்து வந்துள்ளார்கள்.

 

சமீபத்தில் ஒரு பெண் விஷயத்தில் சிக்கிய அந்த அமைப்பின் பாஸ் சிறையில் வாடி, வதங்கி, எல்லோரும் அந்தர் பல்டி அடித்து ஒரு அவர் வழியாக நாடு திரும்பி – மூலையில் முடங்கி இருந்தார்.

 

அவரது நாட்டின் பெண் அதிகாரி ஒருவருக்கு அதில் வேலை உடனே கிடைத்தது.

 

உலகளாவிய விதத்தில் – முன்னேறும் முக்கிய இரண்டு நாடுகளில் சீனா முதன்மை வகிக்கிறது.

 

இரண்டாவது நமது இந்தியா.

 

வரும் காலங்களில் ஏதேனும் ஒரு சப்பை மூக்கரோ அல்லது என் போன்ற மானிற நீண்ட மூக்குத் தயிர் சாதமோ தான் அதன் தலைமை அதிகாரியாக முடியும் என்ற கட்டாயத்தை மாறி வரும் உலகப் பொருளாதாரம் உருவாகி விட்டது.

 

அதன் ஒரு வெளீப்பாடாகத்தான், எனக்கு அழைப்பு வந்தது எனலாம்.

 

அதனாலேயே எனக்குச் செல்ல விருப்பமில்லை.

 

ஐ. எம். எஃப் உலகின் பொருளாதாரத்தை வழிமுறைப் படுத்தும் அமைப்பு.

 

நம் ஊர் தகிடுதித்தங்களையே சமாளிக்கும்போது விழி பிதுங்கும்போது ... பல நாடுகளின் நயவஞ்சக நாடகங்களை பதவியில் இருக்கும்போது கண்டும் காணாமல் இருந்து எப்படி நிம்மதியாக உறங்குவது?

 

“தேவை இல்லாமல் மனதைப் போட்டு குழப்புவதை நிறுத்து. ஊழல் எல்லா இடத்திலும் பரவி இருக்கிறது, தம்பி! அதைத் தடுக்க முடியாது. பழங்காலத்தில் எல்லாம் ஒழுங்காக இருந்ததுன்னு இன்றைக்கு பீட்டர் விடறவங்க நிறைய உண்டு. ஆனா – இராமாயண காலத்துல கூட – இராவணன் இன்னொருத்தரோட பொண்டாட்டியைக் கடத்தினான். வாலி தன்னோட தம்பியோட மனைவியை, அரசியல் பழிவாங்கல்னு சொல்லி தன்னோட அந்தப் புறத்துல சேர்த்தான். அந்தத் தப்புக்களுக்காக அவங்கக் கொல்லப்பட்ட விஷயம் நமக்கு நல்லதா ஒரு புறம் தோணலாம் தான். ஆனாக்க, அப்பவே – அடுத்தவன் மனைவிக்கு மக்கள் தகாத எண்ணங்கள வளர்த்தாங்கன்னும் ஒப்புக்கணுமா இல்லையா?”

 

அய்யா நந்து பாகவதரே ... இந்தப் பஞ்சாங்கத்தனமான வாதங்கள நான் ஒப்புக்கறேனா இல்லையாங்கறது ஒரு புறம் இருக்கட்டும். இன்னிக்கு ஊழல் மலிஞ்சதால உலகமே அல்லோல கல்லோலப் படுது. நாளைக்கு எந்த நாட்டுல எதுக்காகப் புரட்சி வெடிக்கும்னு ...

 

இன்டர்க்காம் ரிங்கியது.

 

பெரிய ஆஃபீஸ் என்றாலும் அடிக்கடி நான் நந்துவின் அறைக்குச் சென்று விடுவேன்.

 

வெகு காலமாக தம் அடித்த நான் – அந்தப் பழக்கத்தை சமீப காலமாக விட்டுத் தொலைக்க முடிவெடுத்து ஒரு அளவுக்கு வெற்றியும் கண்டேன்.

 

சுமார் 8 வாரங்களாக தம் அடிக்கவில்லை.

 

நந்துவின் அறை புகை மண்டலமாகவே காட்சியளிக்கும். ஒரு காற்றிழுக்கி இயந்திரம் அவனது அறையில் அயராது இயங்கி புகையை விழுங்கி சூழலைச் சுத்தப்படுத்தும்.

 

அப்படியும் அது நாத்தமடிக்கும்.

 

அவன் அவ்வப்போது விடும் புகையை சுவாஸித்து எனது நிக்கோட்டின் பசியைப் போக்கிக் கொள்வேன்.

 

ரிஸப்ஷனிஸ்ட் ஃபில்லிஸ் மென்டோன்ஸா என்ற கோவா அழகி என்ன் சொன்னாள் என்று தெரியாவிட்டாலும், ஏதோ சீரியஸ் மேட்டர் என்பது நந்துவின் மாறும் முகபாவத்திலிருந்தும், தொண்டையில் புகை சிக்கி அவன் திடீரென இருமியதிலிருந்தும் எனக்கு விளங்கிற்று.

 

“Give me 3 minutes and send her in, Phyllis. ஒரு முக்கியமான விஷயம் ரமேஷ். சில மாசங்களுக்கு முன்னால ஒரு பொண்ணு – என்னோட ஸன் குமாருக்கு ட்யூஷன் சொல்லித் தர வந்தா. இளம் விதவை. என்னோட ஒய்ஃப் சுமித்ராவ கான்ஸருக்குப் பலி குடுத்ததுக்கு அப்புறமா ... குமாருக்கு அம்மாவும் அப்பாவுமா நானே இருந்துகிட்டு வரேன். ஆனாக்க ... என்னால ஒரு 7 வயசுப் பயலுக்கு என்னவெல்லாம் வேண்டி இருக்கலாம்னு ஒரு பொண்ணோட கோணத்துலேந்து பார்த்துப் பார்த்து correct ஆச் செய்ய முடியல்ல. பார்க்க அவ அழகாவும் இருக்காளேன்னு ... ஒரு மேரேஜ் ப்ரொபோஸல் வெச்சேன். From that day அவ வேலைக்கு வரல்ல. Now, she has come here.”

 

இத்தன நாளா இத்த எங்கிட்டயே மறச்சியேடா புடலங்காய்த் தலையா! உன்னக் கொல்லலாம்போல....

 

ராதிகா உள்ளே நுழைந்தாள்.

 

Bloody hell, stone the crows! சரின்னு உடனே சொல்லியிருக்க வேண்டியது தானே ராதிகா?

 

“இவங்கள உனக்கு முன்னமே ...”

 

நாங்க ஒண்ணாக் காலேஜுல படிச்சோம்.

 

அடக்கமாக ராதிகா இருக்கையில் அமர்ந்தாள்.

 

வெள்ளைப் புடவை ... வெறும் நெற்றி .... சொகமான மை தீட்டப்படாத – அதே அழகான கண்கள். பார்க்கப் பாவமாக இருந்தது.

 

ஸ்வீட் ஆர்டர் பண்ணுடா நந்து! ராதிகா சரின்னப்போறான்னு இப்பவே நான் பெட் கட்டறேன். உன்னோட சந்தேகப் பிசாசின் சொற்படி எதிர் பெட் கட்டி நீ தோத்தாலும், நீ தான் ஜெயிப்ப!

 

எனக்குள் ஒரு திடீர்ப் பெருமிதிம்.

 

ராதிகா மௌனமாகத் தலை குனிந்தாள்.

 

மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி!

 

சொல்லி முடித்ததும் நான் துள்ளிக் குதித்தேன்.

 

மும்பை விமான நிலையம் – இன்று

 

டெல்லியில் அமெரிக்க தூதர முன்னிலையில் ஐ. எம். எஃப்ஃபின் தற்போதைய தலைவரான ஃப்ரெஞ்சு அம்மையாரைச் சந்தித்தேன் ... எனக்கு பணியில் அமரும் உத்திரவு பிறப்பிக்கப்பட்டது. ஏற்க அமெரிக்கா செல்ல ஆயத்தமாக, மும்பையின் மாமன்னர் சிவாஜி விமான நிலயத்தில் ஒரு சிற்றுண்டிச் சாலையில் பீர் அருந்திக் கொண்டிருந்தேன்.

 

நந்து-ராதிகா திருமணம் நடந்தபோது தான் அந்த ஃப்ரெஞ்சு அம்மையார் வந்தார் ...

 

ஆகையால் அவர்களது திருமணத்தில் நான் கலந்து கொள்ள முடியவில்லை.

 

தனது மாமனார் தயவில் ஸ்வித்ஸர்லாந்தின் ஜினீவா நகரின் ஓரத்தில் ஒரு ஏரிக்கரையோரம் அமைந்திருந்த ஒரு பங்களாவை – இலவசமாகக் கொடுக்க தடானியை சம்மதிக்க வைத்து – அதையே அவர்களுக்கு எனது திருமணப் பரிசாகக் கொடுத்திருந்தேன். எனக்கும் நந்துவுக்கும் சம்பிரதாயப் பரிசுகள் பரிமாறிக் கொள்ளும் பழக்கம் கிடையாது.

 

ராதிகாவின் திருமணத்திற்குப் பிறகு எனக்கு மும்பையில் இருக்கப் பிடிக்கவில்லை.

 

அவர்களது தேனிலவைச் சாக்காக்கி – நானும் கிளம்பியிருந்தேன்.

 

எனது ஒண்ணுவிட்ட அண்ணன் அமெரிக்காவின் ஸான் ஃப்ரான்ஸிஸ்கோவில் ஒரு ஸாஃப்ட்வேர் கம்பெனி நடத்திக் கொண்டிருந்தான். அவன் வீட்டில் ஒரு வாரம் தங்கி – இன்டர் நெட்டில் வாஷிங்டன்னிலுள்ள வீடுகளைப் பார்த்துத் தேர்ந்தெடுக்க, அவனது 14 வயது மகனுடன் விளையாடிப் பொழுதைக் கழித்து – சரியாக 10 நாட்களில் ஐ.எம்.எஃப் டைரக்டராகப் பதவி ஏற்கவிருந்தேன்.

 

குமாருக்கு ஒரு வாரம் லீவ்.

 

“ரொம்பக் குளூரா இருக்குமாப்பா? பல்லெல்லாம் .... தட தடன்னு...”

 

குமார் நந்துவை நச்சரித்துக் கொண்டிருந்தான்.

 

“உனக்கு வேணும்ங்கற எல்லா டாய்ஸயும் வாங்கித் தர்றேன். நானும் உன்னோட சித்தியும் ரொம்ப நேரம் ஸ்விஸ்ல தனியாப் பேச வேண்டியிருக்கும். அப்ப நீ கேள்விகேட்டுத் தொணதொணக்காம இருக்க – உன்னோட பொழுது போக என்னவெல்லாம் வேணுமோ ... வாங்கிக்க.”

 

“பெரிய லிஸ்டு வெச்சிருக்கேன். எல்லாத்தையும் மரியாதையா வாங்கிக் குடுத்துடு. இல்ல உன்னோட ரெண்டாவது ஹனிமூனைக் காமெடியாக்கிடுவேன். சரிப்பா ... நீ தான் சித்தியை செட் அப் பண்ணி கல்யாணமும் கட்டிகிட்டியே? இப்போ எனக்கு கிஃப்ட் வாங்கிக் குடுத்து அவங்கள இம்ப்ரஸ் பண்ணறது ரொம்பத் தேவையா? நீ வேணும்னா உனக்குத் தெவையான சிகரெட்களையும் ப்ராந்தியையும் வாங்கிக்க. யூரோப்ல எல்லாமே ரொம்பக் காஸ்ட்லின்னு என்னோட friend அப்பா சொன்னார்.”

 

“பெரிய தாத்தா மாதிரிப்பேச எங்கடா கத்துகிட்ட?”

 

குமாருடன் நந்து தனது மணிபர்ஸை ஒல்லியால்லச் சென்றான்.

 

உச்சந்தலை நடுவகிட்டில் குங்குமத்துடன், நெற்றியில் பெரிய இரத்தச் சிகப்பு நிற ஸ்டிக்கர் பொட்டுடன், தனது மீன் விழிகள் ஓரங்களில் அழகிய கார் வேலிகளை அமைத்திருந்த ராதிகா மயில் பச்சை சாரி-மேட்சிங் ப்ளவுஸ் ஆகியவற்றில் தேவதை போலக் காட்சியளித்தாள்.

 

காலேஜுல என்ன அலக்கிழிச்சியே ... கடைசில நான் தான் உனக்கு உதவினேன் ... பார்த்தியா?

 

“எங்க கல்யாணத்துக்கு நீ ஏன் வரல்ல?”

 

அதான் ... அந்த வெளி நாட்டுப் பெரிய மனுஷங்களோட மீட்டிங் தொந்தரவுன்னு...

 

“நீ இன்னும் ஏன் கல்யாணம் பண்ணிக்கல்ல?”

 

சரியான ஆளு மாட்டல்ல ராதிகா!

 

“உன் கிட்டத் தனியாப் பேச இது ஒண்ணுதான் சந்தர்ப்பம்னு நினக்கறேன். 4 விஷயம் – ஒரே ஒரு கேள்வி.”

 

கோ அஹெட்.

 

“காலேஜ் send off party ல உன்னோட கவிதை பிரமாதம். அன்றைக்கு என் கிட்ட ஐ லவ் யூ சொல்லுவன்னு எதிர்ப்பார்த்தேன் ... அத நீ சொல்லல்லன்ன போது ... உன்னோட கவிதை சுமார்னு எரிச்சல்ல சொன்னேன் ... ஐ. ஆம் ஸாரி.”

 

நான் பேசவில்லை.

 

“இரண்டாவது விஷயம் – டெல்லி ஹோட்டல் அறைக்கு வந்தப்ப – எங்கப்பா கடன் குடுத்ததக் குத்தம் சொல்லி –எனக்கு நடக்கவிருந்த கல்யாணத்தத் தடுத்துடுன்னு கெஞ்ச வந்தேன். நீ போதையில தியாக வசனம் பேசி அதையும் கெடுத்த. ஈஸியாக் கிடச்ச கடன குடிச்சே என்னோட கணவர் லக் ராஜ் காலி பண்ணினார். அதுனாலியே செத்தும் போயிட்டார். அந்தச் சோகத்தத் தாங்க முடியாத என்னோட அப்பவும் ஸ்வர்க்கத்துக்கோ நரகத்துக்கோ பயணமாயிட்டாரு. டெல்லியில இருக்கப் பிடிக்கல்ல. மூணாவதா எப்படியாவது உன்னைக் கண்டுபிடிக்க மும்பை வந்தேன். செலவுக்கு ஆகுமேன்னு ட்யூஷன் சொல்லிக் குடுக்க ஆரம்பிச்சேன். நந்து ப்ரொபோஸ் பண்ணப்ப – எனக்குப் பிடிக்கல்ல – ஏன்னா நான் உன்னைப் பார்த்து ... ‘காலேஜுல கால வாரினதுக்கெல்லாம் சாரி ... என்னக் கைப்பிடிச்சுக் காப்பாத்துன்னு’ சொல்ல உன்னைத் தேடிகிட்டு இருந்தேன். அப்புறமா நந்து உன்னோட பார்ட்னர்னு சொன்னாங்க. நாலாவது விஷயம் - உங்க ஆஃபீஸுக்கு – ‘என்னக் கல்யாணம் பண்ணிக்கோன்னு’ வெட்கத்த விட்டுச் open ஆ request பண்ண வந்தப்ப ... நீயே என்னை நந்துவோட சேர்த்து வெச்ச ... காலேஜுல நான் உன்னோட உயிரை வாங்கினேன். அப்படியும், எனக்கு ரெண்டு முறை நல்ல வாழ்க்கை அமைச்சுக் குடுத்த. உனக்கு எப்படி நன்றி சொல்லறதுன்னே தெரியல்ல.”

 

நன்றியை வாயால சொல்லலாம். ஏன் பள்ளிக்கூடத்துல இம்போஸிஷன் எழுதற மாதிரி பத்தாயிரம் முறை ஒரு நோட்புக்ல எழுதி எனக்கு அமெரிக்கா விலாசத்துக்கு கொரியர்ல கூட அனுப்பலாம்.

 

ராதிகாவின் சிரிப்பில் ஒரு சோகமிருந்தது.

 

நந்துவும் குமாரும் 7 பைகளுடன் வந்தார்கள்.

 

“ஜோக்கச் சொன்னா நான்களும் சிரிப்போமில்ல!”

 

தன் கணவன் பக்கம் திரும்பி – “ரமேஷக் காலேஜுல கிண்டல் பண்ணி – உண்டு இல்லன்னு பண்ணிடுவேன். யூ நோ – ஒவ்வொரு தடவயும் – அவரரோத்து ... முட்டாளாகி மொக்கையாவார். அப்படி எல்லாம் அவரை நான் அலைக்கிழிச்சாலும், என்னை மறுபடியும் மறுபடியும் இவர் தான் ஹெல்ப் பண்ணினார். ஏன் உங்களொட கூட இவர் தான் சேர்த்து வெச்சார். அதுக்கு நன்றி சொல்லவந்தப்ப நக்கல் ஜோக் ஒண்ணு அடிச்சு சிரிக்கவெச்சார். For the first time, இவர்கிட்ட நான் மொக்கையானேன். நம்ப வாழ்க்கையில விளக்கேத்திவெச்ச இவருக்கும் எனக்கும் உள்ள உறவுக்கு என்னப் பெயர் வெக்கறது?”

 

“Swiss Air announces the departure of ...”

 

“எக்கச்சக்க ட்யூட்டி ஃப்ரீ பைகள். சீக்கிரம் போனால் தான் ஓவரெட் லாக்கர்ஸ்ல இடமிருக்கும். கம் லெட் அஸ் கோ. இந்த வித்தியாச உறவுக்கான ஒரு நக்கலான பெயரை யோசிச்சு சொல்லறேன், ரமேஷ்! இன்னிக்கி இம்போஸிஷன்னு சொல்லி என்ன மொக்கையாக்கிட்ட. இதுக்கு சரியான பத்லடி குடுக்கறேன்...”

 

விமான கேட் கீழ்த் தளத்தில் இருந்ததால் – உடனே என் பார்வையிலிருந்து அவர்கள் மறைந்து விட்டனர்.

 

நல்ல வேளை நான் குலுங்கிக்குலுங்கி அழுததை அவர்கள் பார்க்கவில்லை!


Posted by TSV Hari on Jul 6, 2012 in Tamil Writings (17) | Comments (0)


Comments

Name
URL
Email
Email address is not published
Remember Me
Comments
(Irrelevant comments
will be deleted)
HOME